மதுரையில் லேப்-டாப் திருடி, தலைமறைவானவரை நான்கு மாதங்களுக்குப் பின், விரட்டிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தார், மாற்றுத் திறனாளி கோபிகண்ணன்.
போலியோ பாதித்த மாற்றுத் திறனாளியான இவர், மதுரை மதிச்சியத்தைச் சேர்ந்தவர். மாநில, தேசிய, சர்வதேச அளவிலான தடகள போட்டிகளில் பங்கேற்று 50க்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றவர். இதற்காக, அரசு 2003ல் தொகுப்பூதியத்தில் பணி வழங்கியது. மதுரை கலெக்டர் அலுவலக பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஷாப்பிங் காம்பிளக்சில் பாதுகாப்பு பணியில் உள்ளார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன், இங்குள்ள கம்ப்யூட்டர் சென்டர் ஒன்றில் லேப்-டாப் திருடு போனது. அதை திருடியவரை கோபிகண்ணன் பிடிப்பதற்குள் தப்பி விட்டார்.
இந்நிலையில், நேற்று காலை அதே நபர் அங்கு நடமாடினார். ஏற்கனவே, தப்பிய நபரைப் போலவே இருந்ததால், அவரை விசாரித்தார் கோபி கண்ணன். அவர் முரணான பதில் கூறவே, அவரை மீண்டும் பிடிக்க முயன்றார். சுதாகரித்த அந்த நபர், அவரை தள்ளிவிட்டு ஓடினார்.இதை எதிர்பாராத கோபிகண்ணன், தனது டூவீலரில் மதிச்சியம் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று, இரு போலீசாரை அழைத்துக் கொண்டு திருடனை விரட்டினார். அந்த நபர் ஓட்டம் பிடிக்கவே, போலீசார் விரட்டிப் பிடித்தனர். விசாரணையில், அவர் அனுப்பானடியைச் சேர்ந்த சந்தனகுமார் (29) என தெரிந்தது. தல்லாகுளம் போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்

