மணிப்பூரைச் சேர்ந்தவர் இரோம் ஷர்மிளா என்ற பெண்மணி. ஆயுதப்படையினர் சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்கக்கோரி 10 ஆண்டுகளாக தனி நபராக நின்று உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வருகிறார்.
2000 ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி மணிப்பூர் மாநிலம் மல்லோம் என்ற இடத்தில் அஸாம் துப்பாக்கிப் படையினர் நடத்திய காட்டுமிராண்டித் தனமான 'என்கவுண்டரில்' ஒரு நடுவயது பெண்மணி உட்பட 10 அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அன்றைய தினம் ஷர்மிலா தனது உண்ணாநிலைப் போராட்டத்தைத் துவங்கினார், இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர் தற்கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டார்.
ஆனால் இவரை ஓராண்டு சிறையில் வைக்கச் சட்டம் உதவியது. ஓவ்வொரு ஆண்டு முடிவிலும் இவர் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார். ஆனால் இவரோ வீட்டிற்குச் சென்று உற்றார் உறவினர்களைப் பார்ப்பதில்லை, ஆனால் தன்னுடைய கோரிக்கையை வலியுறுத்தி மீண்டும் பட்டினிப்போராட்டம் செய்வார் மீண்டும் கைது மீண்டும் போராட்டம் என்று இவரது வாழ்வு இருந்து வந்துள்ளது,.
இவருக்காகவே ஜே.என். மருத்துவமனையில் ஒரு அறை சிறையாக மாற்றப்பட்டுள்ளது . இந்தியாவில்தான் இவருக்கு கைது வரவேற்பு. ஆனால் தென் கொரியா இவருக்கு அவர்கள் நாட்டின் உயர்ந்த மனித உரிமை விருதைக் கொடுத்து கவுரவித்தது. சமீபத்தில் இவருக்கு ரவீந்திரநாத் தாகூர் விருதும், ரூ.51 லட்சம் ரொக்கமும் அளிக்கப்பட்டது. ஆனால் இவர் பணத்திற்காக போராட்டம் நடத்தும் சாதாரண நபர் அல்ல.. எவ்வளவோ பேர் வலியுறுத்தியும் இவர் தனது பட்டினிப் போராட்டத்தைக் கைவிடுவதாயில்லை.
இவரது போராட்ட எதிரொலியால் 2004ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி மணிப்பூர் அரசு 7 சட்டமன்றத் தொகுதிகளிலிருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்தது. ஆனால் இதற்கெல்லாம் இவர் மசியவில்லை. அதாவது இந்த அடாவடிச் சட்டம் முற்றிலும் ஒழிக்கப்படவேண்டும் அது வரை என் போராட்டம் ஓயாது என்று இவர் பட்டினிப்போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார்.
ஆனால் இந்தச் சட்டத்தை வாபஸ் பெற்றால் மீண்டும் போராளிகள் அல்லது பிரிவினைவாதிகள் கை ஓங்கும் என்று மறுத்து வருகிறது.
இவர் பட்டினிப்போராட்டம் 10-வது ஆண்டைத் தொட்டுவிட்டதால், ஜஸ்ட் பீஸ் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு இவரை கௌரவிக்க முடிவு செய்துள்ளது.
நவம்பர் முதல் வாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மணிப்பூர் செல்கிறார். அப்போது இவர் ஷர்மிலாவைச் சந்திக்க முயற்சி செய்கிறாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
அரசியல்வாதிகளின், போலிகளின் போலி உண்ணாநிலைப் போராட்டத்தைப் பார்த்து பார்த்து மனம் வெதும்பும் உண்மையான குடிமகன்களுக்கு ஷர்மிலாவின் போராட்டம் ஒரு மன தைரியத்தை அளிக்கும் என்று நம்பலாம்.
ஒரு மாநிலத்தின் அடக்குமுறையை எதிர்த்து ஒரு தனி நபர் அதுவும் ஒரு பெண்மணி ஒற்றையாளாக நின்று அறப்போராட்டம் நடத்துவது காந்தி தேசமான இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் விஷயம் என்பது ஒரு புறமிருக்க,
காந்தி எதிர்த்தது அன்னிய சக்திகளை, ஆனால் இன்று இந்த இரும்புப் பெண்மணி எதிர்ப்பதோ நம் உள்நாட்டு ஆதிக்கச் சக்திகளை என்பது நம்மை சிந்திக்கத் தூண்டும் ஒரு விஷயமாகப் பார்க்க அறிவுறுத்துகிறது.
