Feed

பிரபாகரன் மீதான ராஜிவ் கொலை வழக்கு தள்ளுபடி

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்த புலித் தலைவர் பிரபாகரன், உளவுப் பிரிவு தலைவர் பொட்டுஅம்மான் ஆகியோரது மரணம் குறித்து இலங்கை அதிகாரிகள் அளித்த தகவல்களில் திருப்தியடைவதாக சி.பி.ஐ., தெரிவித்தது. இதையடுத்து, அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை தள்ளுபடி செய்து, வழக்கை கைவிடுவதாக, "தடா' சிறப்பு கோர்ட் அறிவித்துள்ளது. 
இந்திய சட்டப்படி, குற்றம் சாட்டப்பட்டவர் இறந்துவிட்டால், அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் தள்ளுபடி செய்யப்படும். அந்த அடிப்படையில், பிரபாகரன் மரணத்தை உறுதிப்படுத்தும் வகையில், அவரது மரணச் சான்றிதழை வழங்கும்படி, இலங்கை அரசை இந்தியா கேட்டுக்கொண்டது. ஆனால், அதுபோல எந்த சான்றிதழும் வழங்கப்பட்டதாக தகவல் இல்லை.


 "தடா' சிறப்பு நீதிமன்ற நீதிபதி தட்சிணாமூர்த்தி, "பிரபாகரனும், பொட்டு அம்மானும் இறந்துவிட்டதாக, புலன் விசாரணை ஏஜன்சியால் நிரூபிக்க இயலும் என இக்கோர்ட் நம்புகிறது. அதன் அடிப்படையில், அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை தள்ளுபடி செய்து, வழக்கை கைவிட உத்தரவிடப்படுகிறது' என, உத்தரவிட்டுள்ளார். மேலும், தொடர்ந்து விசாரணை நடத்தி, விசாரணையின் முன்னேற்றம் குறித்து அடிக்கடி அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மரணமடைந்து விட்டதாக, இந்திய அரசு முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

Copyright © 2009 News and Entertainment All rights reserved.