ஜகார்த்தா: இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், கடலில் 10 அடி உயரத்துக்கு சுனாமி உருவானது. இதில் 110 பேர் பலியாயினர்; பெண்கள், குழந்தைகள் என 380 பேர் காணாமல் போய்விட்டனர். இந்தோனேசியாவின், மேற்கு பகுதியில், சுமத்ரா தீவின் அருகிலுள்ள மென்டாவாய் தீவுக்கருகில் நேற்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், மேற்கு சுமத்ரா தீவிலுள்ள பல்வேறு மாகாணங்களில் உணரப்பட்டது.
நிலநடுக்கத்தால், கடலில் 10 அடி உயரத்துக்கு சிறிய அளவில் சுனாமி ஏற்பட்டது. மென்டாவாய் தீவுகளில் 20 கி.மீ., தூரத்துக்கு சுனாமியால் ஏற்பட்ட அலைகள் புகுந்தன. இந்தச் சுனாமியில் சிக்கி மென்டாவாய் தீவுகளில் 150 வீடுகள் சேதம் அடைந்தன. மென்டாவாய் தீவுகளில் தெற்கு பகாய் என்ற இடத்தில் உள்ள பெலு மொங்கா உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 380 பேர், வெள்ளத்தில் சிக்கிக் காணாமல் போய்விட்டனர். மலகோபா என்ற கிராமத்தில் 80 சதவீத வீடுகள் அழிந்து விட்டன. உணவுத் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. தீவுகளின் அருகில், படகில் சுற்றுலா மேற்கொண்டிருந்த 10 ஆஸ்திரேலியர்கள் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
