விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் எந்த அளவிற்கு வளர்கிறதோ அதற்கேற்ப மோசடி செய்பவர்களும் தங்களது மோசடி முறைகளை மாற்றிக்கொள்கிறார்கள்.
அந்த வகையான மோசடிகளில் ஒன்றுதான் வேலை தருவதாக கூறி வரும் மோசடி இ மெயில்கள்.
வங்கியிலிருந்து கேட்பதாக கூறி வங்கி கணக்கு எண் மற்றும் ரகசிய எண்ணை கேட்பது, "உங்களுக்கு பரிசு விழுந்துள்ளது; அதனை அனுப்பி வைப்பதற்கான கூரியர் செலவு மற்றும் டாக்குமெண்ட் கட்டணமாக இவ்வளவு தொகையை கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கி கணக்கில் செலுத்துங்கள்..." என்பதுமாதிரியான மெயில்களை அனுப்பிக்கொண்டிருந்தவர்கள், அவை மோசடியானது என்பது தெரியவந்துவிட்டதால், தற்போது தங்களது யுக்தியை மாற்றிக்கொண்டு, வேலை தேடுபவர்களை குறிவைக்கிறார்கள்.
இதுநாள் வரை பேருந்துகளிலும், ரயில்களிலும் பிட் நோட்டீஸ் அடித்து ஒட்டி, அதில் " பிரபல அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களுக்கு படித்த மற்றும் படிக்காத ஆட்கள் தேவை. மாதச் சம்பளம் 10,000 முதல்..." என்று வாயை பிளக்க வைக்கும் தொகையை குறிப்பிட்டு, முகவரி எதையும் தெரிவிக்காமல், செல்போன் எண்ணை மட்டும் தெரிவித்திருப்பார்கள்.
அதைப்பார்த்து ஏமாந்து தொடர்புகொள்பவர்களிடம், ஏதாவது ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரச்சொல்லி, 10,000 சம்பளத்திற்கு 10,000 டெபாசிட் கட்ட வேண்டும், 20,000 என்றால் அதற்கேற்ற தொகை என்று கூறி, லம்பாக ஒரு தொகையை கறந்துகொண்டு கம்பி நீட்டி விடுவார்கள்.
இத்தகைய நபர்கள்தான் இப்பொழுது புது அவதாரம் எடுத்து, தங்களது மோசடிகளை அரங்கேற்ற தொடங்கியுள்ளனர்.
ஏதோ ஒரு வகையில், எப்படியோ இ மெயில் முகவரிகளை திரட்டிக்கொள்ளும் இத்தகைய மோசடி பேர் வழிகள், பிரபலமான கம்பெனி பெயரில் , ஏகப்பட்ட பதவிகளின் பெயர்களை குறிப்பிட்டு, வேலைக்கு ஆட்கள் தேவை என்றும், உங்களுக்கு ஏற்ற வேலைக்கு விண்ணப்பிக்க கல்வி தகுதி சான்று, வேலை அனுபவம் முகவரி அத்தாட்சி, சம்பள பட்டியல் போன்றவற்றை அனுப்புங்கள் என்று கூறி ஒரு போலியான தனிநபர் மெயில் ஐடி கொடுத்திருப்பார்கள்.
கூடவே மிக முக்கியமாக, வேலைக்கான நேர்முக தேர்வுக்கு வருவதற்கு செக்யூரிட்டி டெபாசிட் தொகை கட்ட வேண்டும் என்று கூறி ஒரு தொகை குறிப்பிடப்பட்டிருக்கும். அத்துடன் அதை செலுத்துவதற்கான வங்கி கணக்கும் கொடுக்கப்பட்டிருக்கும்.
அதை உண்மையென நம்பி பணம் போட்டால் அவ்வளவுதான்.பணத்தை எடுத்துக்கொண்டு, அந்த வங்கிக்கணக்கையே "குளோஸ்" செய்துவிட்டு கம்பி நீட்டிவிடுவார்கள்.
பொதுவாகவே இத்தகைய மெயில்கள் மோசடியானவை என்பதை, அதில் காணப்படும் சில பொதுவான ஏமாற்று வேலைகளிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.
முதலில் பிரபல கம்பெனி என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதற்காக, குறிப்பிட்ட பிரபல நிறுவனத்தின் பெயரோடு துணை வார்த்தைகளையும் சேர்த்திருப்பார்கள்.
