Feed

மனித மலத்தை மனிதர்கள் அள்ளும் அவலம்

மனித மலம் வெற்றுக் கையால் அள்ளப்படுகின்றது
மலத்தை மனிதர்கள் அள்ளும்
 
மனித மலத்தை மனிதர்கள் அள்ளும் அவலம் இந்தியாவில் சட்டரீதியாக ஒழிக்கப்பட்டுவிட்டதாக அரசு கூறினாலும், பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் இன்னமும் இந்த பணியில் ஈடுபடுத்தப்படுவதாக கூறும் தலித் சமூகத்தினர் அதை முற்றாக ஒழிக்கக்கோரி புது தில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
 
இந்தியா முழுவதிலிருந்தும் இந்திய தலைநகர் தில்லியில் திரண்ட ஆயிரக்கணக்கான மலம் அள்ளும் துப்புரவுத் தொழிலாளர்கள், தங்களை இந்த இழிவான பணியிலிருந்து மீட்குமாறு இந்திய நடுவணரசுக்கு கோரிக்கைகளை முன்வைத்தனர். 

இந்தியாவில் மனித கழிவை மனிதர்கள் அள்ளும் நடைமுறை தேசிய அளவில் 1993ம் ஆண்டிலேயே சட்டரீதியாக ஒழிக்கப்பட்டாலும், இன்னும் பல மாநிலங்களில் இது தொடர்வதாக கூறுகிறார் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்திய தேசிய துப்புரவுத் தொழிலாளர் சங்கத்தின் தலைவரான, பெசவாடா வில்சன். இந்த இழிவை சுமப்பவர்கள் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சமூகத்தின் மற்ற பகுதியினர் மத்தியில் இதை ஒழிப்பதில் அதிக அக்கறை இல்லை என்கிறார் அவர். 

எனவே, இந்திய அரசால் சட்டவிரோதமாக்கப்பட்ட மனித கழிவை மனிதர்களே அகற்றும் அவலத்தை முற்றிலுமாக ஒழிக்க அரசு அதிகபட்ச அக்கறை காட்டி குறிப்பிட்ட கால எல்லைக்குள் இதை ஒழித்து இதில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் நடைமுறைகளை செயற்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார். 

சட்ட ரீதியாக தடை செய்யப்பட்ட இந்த அவலம், இந்தியாவில் பரவலாக தொடர்வதை ஒப்புக்கொள்கிறார் இந்திய நடுவணரசின் ஓய்வு பெற்ற அமைச்சரவைச் செயலர் டி.எஸ்.ஆர்.சுப்ரமணியன். பழமையில் ஊறிப்போன இந்திய சமூகத்தில் மாற்றங்கள் மிகவும் தாமதமாகவே ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.





Copyright © 2009 News and Entertainment All rights reserved.